ஆயிரம் சதுரடியில் 50 வகையான தாவரங்கள்

‘மாடித் தோட்டத்தின் மூலம் மருத்துவம் மட்டுமல்ல..வருமானம் பார்க்கலாம்’’ என்கிறார் சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். ‘‘நான், ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர். இந்த வீட்டுக்குக் குடிவந்தப்ப... இந்த ஏரியாவே செடி, கொடி இல்லாம பாலைவனம் மாதிரி இருந்துச்சு. மொத்த ஏரியாவை மாத்த முடியாட்டியும்... நம்ம வீட்டையாவது பசுமையாக்குவோம்னு நினைச்சுதான் இந்த வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினேன்’’ என்று பெருமையோடு சொன்னவர்,

மொட்டை மாடியில் தட்டுகள்ல மண்தொட்டிகளை வெச்சு... அதுல செம்மண், தேங்காய் நார், ஆட்டுப் புழுக்கைகளைப் போட்டுத்தான் பயிர் பண்றேன். தக்காளி, பப்பாளி, சிகப்புத் தண்டுக்கீரை, மிளகாய், வெள்ளரி, பீன்ஸ், பீர்க்கங்காய், பசலைக்கீரை, வெண்டை, காராமணி, புடலங்காய், அவரை, முட்டைகோஸ், முருங்கைக்காய், பாகல், கேரட், வாழைனு அத்தனையையும் வளக்கிறேன். சின்னச் செடிகளை தொட்டியிலயும், வாழை மாதிரியான பயிர்களை செம்மண் நிரப்புன சாக்குப் பையிலயும் வளக்குறேன். இந்த ஆயிரம் சதுரடியில் மட்டும் பூக்கள், காய்கள், கீரைகள்னு 50 வகையான தாவரங்கள் இருக்கு.

பொதுவா, காய்கறிச் செடிகளுக்கு சூரிய வெளிச்சம் தேவை. அதுவே அளவுக்கு மீறி இருந்தா ஆபத்தாகிடும். அதனால, வெளிச்சத்தைப் பாதியா குறைக்கறதுக்காக பசுமைக் குடில் அமைச்சுருக்கேன். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெயைத் தண்ணியில கலந்து தெளிப்பேன். காலையிலயும் சாயங்காலமும் தண்ணி ஊத்துவேன். தொட்டியில வழிஞ்சு வர்ற தண்ணி, தொட்டிக்குக் கீழ இருக்கற தட்டுலயே தங்கிடும். அதனால அதைத் திரும்பவும் பயன்படுத்த முடியும். அதோட, காங்கிரீட்டுக்கும் பாதிப்பு இருக்காது. கழிவுகள்ல இருந்து எரிவாயு தயாரிக்கற கலனை வீட்டுல அமைச்சுருக்கேன். கழிவுகளை அரைச்சு அதுல ஊத்திட்டா வீட்டுக்குத் தேவையான எரிவாயு கிடைச்சுடுது. ஆரம்பகட்டத்துல ஆகுற செலவு மட்டும்தான். வேற செலவு கிடையாது. இந்தக் கலன்ல இருந்து வெளியாகுற கழிவு நீர்...நல்ல உரம். இதைத்தான் செடிகளுக்கு ஊட்டத்துக்காகக் கொடுக்கிறேன். அதனால, ஒரு சொட்டு ரசாயனத்தைக்கூட பயன்படுத்தறதில்லை. ஒரு வருஷமா... எங்க வீட்டுல விளையுற காய்களைத்தான் நாங்க சாப்பிடறோம். தேவைக்குப் போக மீதம் உள்ளதை வித்துடறோம்’’ என்பவர்,
‘‘வயசான காலத்துல சந்தோஷம், மனநிம்மதி, ஆரோக்கியம், பணம்னு எல்லாம் கொடுக்கிற இந்த இயற்கைக்கு, நான் என்ன கைமாறு செய்ய போறேன்னுதான் தெரியல’’ என்று நெகிழ்கிறார். ரசாயனம் தவிர்த்து இயற்கை விவசாயம் செய்வதே இயற்கைக்குச் செய்யும் கைமாறுதானே.!

இயற்கைக்கு நாம் பெரிதாக எந்த கைமாறும் செய்ய வேண்டாம். அதை இம்சிக்காமல் இருந்தாலே போதும். குறைந்த பட்சம் விவசாயத்திலாவது ரசாயன பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நடைபிணங்களாக ஒரு சந்ததியையே மாற்றிய நச்சு அரக்கனை வீட்டுத் தோட்டத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது. ‘‘எல்லாம் சரிதான்.. செடிகள் இருந்தா அதில் உக்கார பூச்சிகள் வரும்.. அது மூலமா நோய்கள் வரும். அதை தடுக்க வேண்டாமா..? ரசாயன பூச்சிக்கொல்லியைத் தெளித்தால்தானே அதை சரிசெய்ய முடியும்.?’’ என்ற கேள்வி நியாயமானதுதான். ஆனால், பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே பூச்சிகளை விரட்டவும் சில வழிமுறைகளை கைக்கொண்டுள்ளது இயற்கை வேளாண்மை.

மூலிகை பூச்சிவிரட்டி! ஆடு சாப்பிடாத இலை மற்றும் தழைகளை மொத்தமாக ஐந்து கிலோ அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில், 9 லிட்டர் தண்ணீர் கலந்து 15 நாட்கள் ஊறவைக்க வேண்டும். 16--ம் நாள் இதை பயிர்களுக்குத் தெளித்தால்.. அதுதான், பூச்சிவிரட்டி. அப்படியும் பூச்சிகள் கட்டுப்படவில்லையெனில், இஞ்சி- 100 கிராம், பூண்டு -100 கிராம், பெருங்காயம் -10 கிராம் ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து, அதை ஒரு லிட்டர் நாட்டுமாட்டு சிறுநீரில் கலந்து, 9 லிட்டர் தண்ணீர் ஊற்றி 10 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு, இதைத் தினமும் செடிகளின் மீது தெளிக்கலாம்.
உதாரணமாக, அதிகளவில் கேந்திப்பூச்செடியை வளர்ப்பதன் மூலம் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்கலாம். தவிர, துளசி, புதினா, வசம்பு, செவ்வந்தி...போன்ற செடிகளும் பூச்சிகளின் வரவைத் தடுக்கின்றன. வசம்பின் வாசம் இருந்தால்... அந்தப் பக்கம் பாம்பு தலை வைக்காது. செடிகளுக்கு தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். வாரம் ஒருமுறை, சிறிது பச்சை சாணம், சிறிது கடலைப் பிண்ணாக்கு, சிறிது வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைத் தண்ணீரில் கரைத்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் ஒரு கையளவு தொழுவுரம் இடவேண்டும். காய்ந்த இலைதழைகளை செடிகளில் மூடாக்காகப் பயன்படுத்தலாம். முட்டைக் கூடு, வெங்காயத் தொழி... போன்ற சமையலறைக் கழிவுகளையும் செடிகளுக்கு உரமாக இடலாம். தேவைப்பட்டால், வேப்பெண்ணெய், மஞ்சள்தூள் ஆகியவற்றை சோப்புக்கரைசலில் கலந்து பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தலாம்.

Comments